நாகை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : 2 பேர் சாவு 6 பேருக்கு கிச்சை
நாகையை அடுத்த பாப்பாக்கோவில் ஏறும் சாலை பகுதியில் திங்கள்கிழமை லாரியும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஷேர் ஆட்டோ பயணிகள் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நாகையை அடுத்த பாப்பாக்கோவில் ஏறும் சாலை பகுதியில் திங்கள்கிழமை லாரியும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஷேர் ஆட்டோ பயணிகள் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நாகையிலிருந்து திங்கள்கிழமை ஒரத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் டிரைவர் உள்பட 8 பேர் பயணித்துள்ளனர்.
இந்த ஆட்டோ, பாப்பாக்கோவில் ஏறும் சாலை பகுதியில், சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறத்துக்குத் திரும்பும் போது, வேளாங்கண்ணியிலிருந்து நாகை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி, சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டது.
இதில், ஆட்டோவில் பயணித்த வடவூர் கடைத்தெரு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி காளியம்மாள்(55) பலத்தக் காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.ஒரத்தூர், கலசம்பாடி, மாதாகோவில் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மனைவி சகுந்தலா(55) நாகை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆட்டோ பயணிகள் ஒரத்தூர்,
வடக்குத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் பசுபதி(20), ஒரத்தூரைச் சேர்ந்த கண்ணன்(60), ஒரத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெ. முருகையன்(38), பாப்பாக்கோவில், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த மு. நாகம்மாள்(50), செட்டிச்சேரியைச் சேர்ந்த து. வசந்தா(50) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒரத்தூர், சிக்கல்பத்து பகுதியைச் சேர்ந்த கா. முருகையன்(31) ஆகியோர் பலத்தக் காயமடைந்தனர். இதில், பா. பசுபதி, கண்ணன் ஆகிய 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த மற்ற 4 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.