முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வு அரசாணை மீறும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் நிலை-2 பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்பட்ட நிலையில் நிறைவேற்றாத கோட்டப் பொறியாளர்களை கண்டித்து நெல்லையில் வருகிற 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:33 AM

நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் நிலை-2 பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்பட்ட நிலையில் நிறைவேற்றாத கோட்டப் பொறியாளர்களை கண்டித்து நெல்லையில் வருகிற 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரிமுத்து வெளியிட்டு செய்திக் குறிப்பு: சாலை ஆய்வாளர் பணியிடம் 1801 ஆகும். இதில்,மூனறில் ஒரு பங்கு இடம் சாலை ஆய்வாளர் நிலை-1 பணியிடமாகும். சாலை ஆய்வாளர் நிலை-2 பணியிடம் நேரடி பணி நியமனம் மற்றும் ஊட்டு பதவியான சாலை பணியாளர் 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்படுகிறது. இப்பணியிடத்தில் 5-ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு தகுதி திறமையின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதோடு, குறிப்பிட்ட ஆண்டு பணிக்காலத்தில் எவ்வித தண்டனையும் இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த உத்தரவை பல கோட்டப்பொறியாளர்கள் மீறி வருகிறார்கள். கடந்த செப்-2008 மாதம் சாலைப்பணியாளர்களில் இருந்து 10-வது தேர்ச்சி பெற்ற 200 பேர் பதவி உயர்வு மூலம் சாலைப்பணியாளர்கள் சாலை ஆய்வாளர் நிலை-2க்கு பதவிக்கு அமர்த்தப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில் செப்-2013 குறிப்பிட்ட ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். அதையடுத்து, காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை-1 பணியிடத்திற்கு தகுதியான நபர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். ஆனால், பல கோட்டப்பொறியாளர்கள் உள் நோக்கத்தோடு பதவி உயர்வு வழங்காமல் ஊழியர்களை போராட்டத்திற்கு தள்ளி அரசுக்கு கெட்ட பெயரை ஏர்படுத்தி வருகிறார்கள். நிலை-1 பதவி உயர்வு மூலம் வழங்கப்படுவதால் நிலை-2ல் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு ஏற்படும்.

அதேபோல், கீழ் பணியாளர்களுக்கு 25 சதவீதம் உயர்வு கிடைக்கும். தற்போது, இவையெல்லாம் தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதைக் கண்டித்து ஒவ்வொரு வட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக வருகிற ஜன-20ம் தேதி நெல்லை வட்ட அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என மாநில பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.