விருதுநகர் மாவட்டத்தில் காவல் இளைஞர் படைக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 21-ம் தேதி மருத்துவத் தேர்வு நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 10,500 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த நவ.10-ம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் காவல் இளைஞர் படைக்கு 320 பேரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மூலம் 1714 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதையடுத்து, கடந்த டிச.30,31 ஆகிய நாள்களில் இவர்களுக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து நடந்த உடற்தகுதி தேர்வில் 312 தேர்வாகியுள்ளனர். ஏற்கனவே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இணைய தளம் மற்றும் தகவல் பலகையிலும் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 18,19 ஆகிய நாள்களில் கைரேகை பதிவும், வருகிற 21-ம் தேதி மருத்துவத்தேர்வும் நடத்தப்பட இருக்கிறது. அதனால் காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவத் தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு காவலர் பயிற்சி நிலையத்தில் விரிவான பயிற்சி அளிக்கப்படும். பின்னர் குறிப்பிட்ட ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நியமித்து தபால் கொண்டு செல்லுதல், வாகனங்களை இயக்குதல் மற்றும் அவசர கால பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.