அரசு வேலைக்கு போலியான நேர்முகத் தேர்வு, ரூ. 7 லட்சம் மோசடி: இளைஞர் கைது
அம்பாசமுத்திரத்தில் அரசு வேலைக்கு போலியான நேர்முகத்தேர்வு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய இளைஞர்
அம்பாசமுத்திரத்தில் அரசு வேலைக்கு போலியான நேர்முகத்தேர்வு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் சங்கர் தெருவை சேர்ந்த ஜான்தேவஇரக்கம் மகன் சாமுவேல் பொன்னுசாமி (65). இவர் தனது மகள் கணவர் பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தை சேர்ந்த அய்யாமுத்து (34) வை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தாராம்.அப்போது அகஸ்தியர்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் ஹரிஹரன். இதே ஊர் கோபால்நகரை சேர்ந்த பேச்சிநாதன் மகன் கார்த்திக் (31), கார்த்திக்கின் மனைவி ஜிக்கி, கார்த்திக்கின் தாயார் புவனேஸ்வரி ஆகியோர், சாமுவேல் பொன்னுசாமியிடம் தமிழக அரசின் நிலஅளவைத்துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பணமாக ரூ. 1.50 லட்சம் பெற்றனராம்.
பின்னர் 2011 ம் ஆண்டு மே மாதத்தில் சென்னையில் நேர்முகத் தேர்வு நடத்தி மேலும் ரூ. 5.60 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் வேலைக்கான நியமன ஆணை கிடைக்காதது குறித்து சாமுவேல் விசாரித்தாராம். இதில் போலியான நேர்முகத் தேர்வு நடத்தி மோசடி செய்தது தெரியவந்தது.
ஹரிஹரன், கார்த்திக் ஆகியோரிடம் சாமுவேல்பொன்னுசாமி இது குறித்து கேட்டபோது, பணத்தை திரும்ப தருவதாக தெரிவித்தனராம். எனினும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம். இது குறித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருகின்றனர்.