அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடையும் வகையில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளை வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில் செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்று வருவாய் துறையில் செயல்படுத்ப்பட்டு வரும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், அம்மா திட்டம், விரைவு பட்டா மாறுதல், பல்வேறு உதவித் தொகை வழங்கும் தி்ட்டம், நில ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டம், நில உச்சவரம்பு நிலங்களை வரையறை செய்யும் திட்டம், புதிய வட்டங்கள் உருவாக்குதல், புதிய கட்டடங்கள் எழுப்புதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வட்டாட்சியர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், வட்டாட்சியர்(சமூக நலத்திட்டம்) மாவட்டத்தில் எத்தனை பேர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்கிற கேட்டாறிந்தார். இக்கூட்டத்திற்கு வருகிற வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பாக அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டுதான் வரவேண்டும் என்றார்.
பின்னர் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்று பேசுகையில், தமிழக முதல்வரால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும். தகுதியானவர்கள் எக்காரணம் கொண்டும் விடுபட்டு விட்டுவிடாமல், அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசினால் ஒவ்வொரு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அலுவலர்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் நடவடிக்கை எடுக்கவிடாமல் அலைய விடக்கூடாது.
இதுவரையில் 2.62 லட்சம் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை 1.83 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்மா திட்டம் 387 கிராமங்களில் நடத்தப்பட்டு 83914 மனுக்கள் வரையில் பெறப்பட்டு, தகுதியான 54,316 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத 25,598 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவு பட்டா மாறுதல் 8 வட்டங்களில் நடத்தப்பட்டு 12728 மனுக்கள் பெறப்பட்டு, 7434 பேருக்கு விரைவு பட்டா ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2054 தகுதியில்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 37144 பேரும், விதவை உதவித் தொகை 15433 பேரும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 3046 பேரும், ஆதாரவற்றோருக்கான உதவித் தொகை 1924 பேருக்கும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார். அதற்கு முன்னதாக ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களில் 54 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7.14 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் சுகன்தீப்சிங்பேடி, மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, திட்ட அலுவலர் பிரபாகர், சட்டப்பேரவை உறுப்பினர்(ஸ்ரீவில்லிபுத்தூர்)பொன்னுப்பாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, துணைத் தலைவர் மூக்கையா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொங்கன் உள்ளிட்ட கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.