மின் வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கு: 4 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கில், 4 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கில், 4 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல்நத்தம் மேடு கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் மணி (58), இவரது மகன் சிவா (30), ராமமூர்த்தி (35), பிள்ளையார் (56). இவர்கள் நால்வரின் நிலங்களும் அருகருகே உள்ளன.இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், 2006-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி இவர்களது நிலத்தின் வழியாக பக்கத்து ஊரான மடவிலாகம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரமேஷ் (15) என்பவர் நடந்து சென்றார்.
அப்போது, மின் வேலியில் சிக்கி ரமேஷ் இறந்தார். இதுகுறித்து, களம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து மணி, சிவா, ராமமூர்த்தி, பிள்ளையார் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நால்வர் மீதும் போலீஸார் வழக்குத் தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், குற்றம் சுமத்தப்பட்ட நால்வருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையுடன், தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.