முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டில் பள்ளி மாணவி சடலம்: டிஐஜி, எஸ்பி தொடர் விசாரணை

சிதம்பரம் அருகே கிள்ளை எம்ஜிஆர் திட்டில் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த 15வயது பள்ளி மாணவி யார் என்ற விபரம் இதுநாள் வரை தெரியவில்லை. இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி முருகன், கடலூர் மாவட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கிள்ளை எம்ஜிஆர் திட்டில் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த 15வயது பள்ளி மாணவி யார் என்ற விபரம் இதுநாள் வரை தெரியவில்லை. இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி முருகன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 15 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் அரசு பள்ளி சீருடையும், ஸ்கூல் பை, காலணிகள் இருந்துள்ளது. ஸ்கூல் பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது. இறந்த போன மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

இறந்து கிடந்த மாணவி யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இறந்து போன மாணவி விடுதியில் தங்கி படிக்கும் மாணவியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி விடுதிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த போன மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மாணவியின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மாணவியின் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டிஐஜி எஸ்.முருகன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா ஆகியோர் கிள்ளை எம்ஜிஆர் திட்டில் மாணவி இறந்து கிடந்த கால்வாய் பகுதியில் தடயங்கள் ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கில் குட்டையில் உள்ள நீரை வெளியேற்றி பொக்லீன் மூலம் திங்கள்கிழமை தோண்டி ஆய்வு செய்தனர். ஆய்வில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. மேலும் போலீஸார் பள்ளி விடுதிகள், தொண்டு நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவற்றில் காணாமல் மாணவியர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் கிள்ளை பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிள்ளை வெட்டு வாய்க்கால் அருகே வசித்து வந்த முனியம்மா என்கிற ஆதிலட்சுமி, நிர்வாணமாக, உடலில் காயங்களுடன், பிணமாக கிடந்தார். கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்.திட்டு கடற்கரையில் இளம்பெண் ஒருவரில் நிர்வாணமாக தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். மேற்கண்ட வழக்குகளில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.