வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல்லில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் தலைமை வகித்தார். சங்க உதவித்தலைவர்கள் பூபதி, ஈ.எம்.ராஜேந்திரன், உதவி செயலர் பி.ராமசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.நல்லாகவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டச் செயலர் பி.பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் கடுமையாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதித்த பகுதிகளில் வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்கிட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை உள்பட அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் வேண்டும்.
தொடர்ந்து, இந்த நிலைமையை தவிர்க்க ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமித்திடவும், அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்யவும் வேண்டும். மேட்டூர் அணையின் உபரிநீரை கால்வாய் அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதற்கான பாசனத் திட்டத்தை அரசு விரைவில் அமலாக்கிட வேண்டும். புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்திட அரசின் நிபந்தனைகளை தளர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மழைவாழ் மக்கள் சங்க நிர்வாகி கே.மாணிக்கம், சங்க நிர்வாகிகள் ஆர்.வேலாயுதம், எஸ்.செல்வம், பெருமாóள், ஜே.கிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.