முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே இறந்த பள்ளி மாணவி அடையாளம் தெரிந்தது: நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்

சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 16 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டில் உடல் சிதைந்த நிலையில் இறந்துகிடந்த மாணவி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கெளசல்யா (18) எனத் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 16 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் அரசு பள்ளி சீருடையும், ஸ்கூல் பை, காலணிகள் இருந்துள்ளது. ஸ்கூல் பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது.

இறந்த போன மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து கடந்த 4 தினங்களாக அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வடக்கு மண்டல் ஐஜி மஞ்சுநாத், விழுப்புரம் சரக டிஐஜி எஸ்.முருகன், கடலூர் எஸ்பி ராதிகா ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்ணின் உடையில் சீர்காழி தையல் கடை செல்போன் மூலம் நாகை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸார் இணைந்து தனிப்படை அமைத்து காணாமல் போன மாணவியர்கள் குறித்தும், நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு வராத மாணவியர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ், தனிப்பிரிவு காவலர் தவபாண்டியன் ஆகியோர் ஊர்,ஊராக சென்று காணாமல் போன மாணவியர்களின் வீட்டிற்கு சென்று சிதம்பரம் அருகே இறந்து கிடந்த மாணவியின் உடல் மற்றும் உடைகள் கொண்ட படத்தை காண்பித்துள்ளனர். அப்போது மாணவியின் பெரியம்மாள் மகள் ஜெயபாரதி, என்பவரது உடையை பார்த்து, இந்த உடை என்னுடையதுதான், தனது சின்னம்மாள் மகள் கெளசல்யாவிற்கு கொடுத்ததாக தெரிவித்தார். பின்னர் ஜெயபாரதியை சிதம்பரத்திற்கு அழைத்து வந்து மாணவியின் உடலில் உள்ள அடையாளம் மற்றும் உடைகளை வைத்து அம்மாணவி கெளசல்யா என்பதை உறுதிசெய்தனர்.

இறந்து போன மாணவி கெளசல்யா நாகை மாவட்டம் தென்னலக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி திருக்கார்த்திகேயன்-பழனியம்மன் தம்பதியினரின் மகள் ஆவார். கெளசல்யா சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் காணவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் போலீஸார் விசாரணையில் சீர்காழி வட்டம் பழையாறைச் சேர்ந்த அன்புதாஸ் என்பவர் வாலிபர் மேற்கண்ட மாணவியை அழைத்துச் சென்றதாக தெரியவந்து அவரை பிடித்து சீர்காழி மற்றும் அண்ணாமலைநகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மாணவி அடையாளம் தெரிந்ததை அடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்து மாணவியின் தந்தை மற்றும் பெரியம்மா மகள் ஜெயபாரதியிடம் விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.