கூமாப்பட்டியில் ரகளையில் ஈடுபட்ட ரௌடி கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூன்று இடங்களில் ரகளையில் ஈடுபட்ட ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூன்று இடங்களில் ரகளையில் ஈடுபட்ட ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ரௌடிஆனந்த் (25).
ராமசாமியாபுரம் டி.இ.எல்.சி. பள்ளி அருகேயுள்ள சுதாகர் என்பவர் கடைக்கு எலுமிச்சம்பழம் போடுவதற்காக, கான்சாபுரத்தைச் சேர்ந்த வ.சூரியநாராயணன் (35) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரௌடி ஆனந்த், சூரியநாராயணனைப் பார்த்து, கான்சாபுரத்துக்காரனுக்கு இங்கு என்ன வேலை என்று கூறி ஆபாசமாகப் பேசி சூரியநாராயணனை அடித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து கூமாப்பட்டிக் காவல் நிலையத்தில் சூரியநாராயணன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தைக் கைது செய்தனர்.
ராமசாமியாபுரம் தங்கசாமி என்பவர் வீட்டு முன்பு, இதே இடத்தைச் சேர்ந்த குருவையா மனைவி பஞ்சவர்ணம் (34) என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த ஆனந்த் திடீரென பஞ்சவர்ணத்தைப் பார்த்து ஆபாசமாகப் பேசி கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையைக் காட்டி, உன்னை அடித்துக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். மேலும் அவரை, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தினாராம். இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
ராமசாமியாபுரம், சர்ச் தெருவில் உள்ள சி.சீனித்தம்பி (50) என்பவர் தனது கடை முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த ரௌடி ஆனந்த், கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200 கேட்டுள்ளார். சீனித்தம்பி கொடுக்க மறுக்கவே, கடையின் கண்ணாடிப் பெட்டி, கண்ணாடி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து சீனித்தம்பி, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தைக் கைது செய்தனர்.