நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்
நாகை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து நாகை மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
நாகை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து நாகை மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ந. சேகர், சே. உதயன், சா. பழனிவேல், பொ. தமிழ்ச்செல்வம், கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த செ. கோபி ஆகியோருக்குச் சொந்தமான 5 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 40 பேரும், புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து வந்து கோடியக்கரையில் தங்கியிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட 10 மீனவர்களும் திங்கள்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, நாகை மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளின் மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதன்படி, நாகை அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் மீனவக் கிராமங்களிலிருந்து ஏராளமான விசைப் படகுகள் மீன்பிடிப்புக்கு ஈடுபடுத்தப்படும் நிலையில், இந்தப் போராட்டம் நீடித்தால், வரும் நாள்களில் நாகை பகுதிக்கான மீன் வரத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.