பாசனத்திற்கு மணிமுத்தாறு அணைத் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 2,756 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 2,756 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.
தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.19 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் 67.39 அடியாகவும் இருந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை அணையில் இருந்து பெருங்கால் மதகு பாசனம் பெறும் நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் முன்னிலையில் அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தண்ணீர் திறந்தார். மணிமுத்தாறு, சிங்கம்பட்டி வைராவிகுளம், தெற்குபாப்பான்குளம், பொட்டல் உள்ளிட்ட பகுதியில் 2,756.62 நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன், எம்.பி. க்கள் எஸ். முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த், கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்திமுருகேசன், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ம. முத்துபாண்டியன், உதவி செயற்பொறியாளர் குமாரசாமி, உதவி பொறியாளர் மாயன்முருகன், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.