நெல்லை மாவட்டம் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி மனு
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இக் கூட்டத்தில் வீரவநல்லூரைச் சேர்ந்த கன்னடியன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,
வீரவநல்லூர் பகுதியில் கன்னடியன் கால்வாயை நம்பி 1000-க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகிறோம். கார் சாகுபடிக்காக ஜூன் 1-ம் தேதி கால்வாயில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியாக இருப்பதால்தான் தண்ணீர் திறக்கவில்லையென கூறப்படுகிறது. இதற்கு முன்பு 40 அடிக்கும் கீழே நீர்மட்டம் இருக்கும்போது கூட தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இப்போது அரசு மறுக்கிறது.
கார் பருவத்தில் ஆடுதுறை 43, 45, அம்பை 16 ஆகிய ரகங்கள்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இன்னும் ஒரு சில நாள்களில் தண்ணீர் திறக்கப்படாமல் தாமதமானால், அதன்பின்பு பயிர்ச்சாகுபடி செய்தாலும் நோய்தாக்கம் அதிகரிக்கும், அதனுடன் பருவமழையால் அறுவடைப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து கார்சாகுபடியைத் தொடங்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.