நாகையில் மார்க்சிஸ்ட் அமைப்புகளின் ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் (மார்க்சிஸ்ட் சார்பு) சார்பில் நாகையில் புதன்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் (மார்க்சிஸ்ட் சார்பு) சார்பில் நாகையில் புதன்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த ரயில் மறியல் போராட்டத்தையொட்டி, நாகை ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை முதல் திரளான போலீஸார் பாதுகாப்புப பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகை ரயில் நிலையத்துக்கு வந்த எர்ணாகுளம் விரைவு ரயிலை மறிக்கத் திட்டமிட்டு போராட்டக் குழுவினர் நாகை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது, ரயில் நிலைய நுழைவு வாயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போராட்டக் குழுவினருக்கு உள் நுழைய அனுமதி மறுத்தனர். இதனால், போலீஸாருக்கும்- போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், போலீஸாரின் தடையை மீறி, போராட்டக் குழுவினர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்திருந்த போராட்டக் குழுவினரை பலவந்தமாக வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.
இதனால், போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்குமிடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் மணிமாறன் நாகை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றுச் சென்றார்.
வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த ஜீவாபாரதி, ஜெயந்தி ஆகியோர் மயக்கம் ஏற்பட்டதாக, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.