நெல்லையில் ரயில் மறியல் முயற்சி: 50 பேர் கைது
பாதுகாப்புத் துறையில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ரயில் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய
ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து திருநெல்வேலியில் ரயில் மறியலுக்கு முயன்றதாக பெண்கள் உள்பட 50 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பாதுகாப்புத் துறையில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ரயில் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் விரோத போக்கில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு புதன்கிழமை காலையில் ஏராளமானோர் திரண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சைலஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் பா.ராஜகுரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி.நடராஜன், பாளை வட்டச் செயலர் பெலிக்ஸ், நெல்லை வட்டச் செயலர் பழனிச்சாமி, அருணாசலம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சேரன்மகாதேவி ஒன்றியச் செயலர் கீதா, மாவட்டத் தலைவர் கே.ஏ.மல்லிகா, மாவட்ட துணைச் செயலர் பி.கற்பகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டபடி ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களை, திருநெல்வேலி காவல் உதவி ஆணையர் லோகநாதன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 17 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.