அம்மா உணவகங்களுக்கு தனிநிதி ஒதுக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி பேட்டி
திருநெல்வேலியில் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நாட்டில் உள்ள பல்வேறு நதிகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பு மற்றும் ஆலைக்கழிவுகளால் மாசடைந்து
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அம்மா உணவகங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி.
திருநெல்வேலியில் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நாட்டில் உள்ள பல்வேறு நதிகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பு மற்றும் ஆலைக்கழிவுகளால் மாசடைந்து வருகின்றன. இவற்றை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கங்கை நதியைச் சுத்தப்படுத்த மத்திய அரசு முதல்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதேபோல தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்தியஅரசு உயர்த்தியுள்ள ரயில்கட்ட உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இக் கட்டண உயர்வால் ஏழைகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பெருமைக்கொள்ளும் வகையில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரட்டை ரயில்பாதை என்னும் திட்டத்தையும், நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தையும் அமைக்க வேண்டும். தமிழகத்திற்குத் தேவையான ரயில்திட்டங்களுக்காக தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றும்படி, எங்கள் கட்சியின் சார்பில் அவர்களுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதுகுறித்து தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலித்திடும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்மா உணவகங்களை வரவேற்கிறோம். ஆனால், அதற்கான நிதி இப்போது மாநகராட்சியில் இருந்து செலவழி்க்கப்படுகிறது. ஏற்கெனவே பல மாநகராட்சிகளிலும் பட்ஜெட் பற்றாக்குறை நிலையில் உள்ளபோது அம்மா உணவகத் திட்ட செலவினத்தையும் அவர்கள் மீது சுமத்தக்கூடாது. அம்மா உணவகங்களுக்காகத் தனிநிதியை ஒதுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.
தாமிரவருணியைப் பாதுகாக்கக்கோரி எங்களது கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் மட்டுமன்றி தாமிரவருணி நதியைப் பாதுகாக்கப் போராடி வரும் அனைத்து இயக்கத்தினரும் பங்கேற்கலாம் என்றார் அவர்.
பேட்டியின்போது கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் முஹம்மது முபாரக், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் உஸ்மான்கான், மாவட்டச் செயலர்கள் ஹயாத், சிந்தா, பொருளாளர் சாதிக், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் நசீர்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.