பெண் ஆசிரியருக்கு நெருக்கடி: நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் மறியலால் பரபரப்பு
பெண் ஆசிரியருக்கு நெருக்கடி அளித்து வரும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை
பெண் ஆசிரியருக்கு நெருக்கடி அளித்து வரும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராக காருண்யா சீலாவதி பணி செய்து வருகிறார். திருப்பூரில் இருந்து பணியிடமாறுதலாகி 20 மாதங்களுக்கு முன்பு மருதகுளம் அரசு பள்ளியில் பணி செய்து வருகிறார். பார்வை இல்லாத காருண்யாசீலாவதிக்கு பள்ளி தலைமையாசிரியர், மற்றும் சக ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடி அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மாற்றுத் திறனாளி ஆசிரியையான காருண்யாவுக்கு வழங்க வேண்டிய சலுகைகள், உரிமைகள் மறுக்கப்படுவதாக திருநெல்வேலி தாமிரவருணி பார்வையற்றோர் முன்னேற்றச் சங்கம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் புதன்கிழமை திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் பிரதான சாலையில் மாற்றுத்திறனாளிகள் 50 க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பல மணி நேரம் காத்திருந்த அவர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரதான சாலையில் அமர்ந்து மீண்டும் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து அவர்களை போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து மாவட்ட கல்வி வைகுண்டராமன் கூறியதாவது: காருண்யாசீலாவதி புகார் தொடர்பாக புதன்கிழமை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு நேரடி விசாரணை நடத்தினார். வருகிற 18 மற்றும் 19 ம் தேதிகளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.