தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு: மக்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்கு பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசியல் கட்சியினரும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வேட்பாளர்களும் வாக்குகள் கேட்டு கிராமம் தோறும் தீவிர பிரசார பணிகளை தொடங்க இருக்கின்றனர். எனவே பிரசாரம் செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், அந்தந்த வட்டார பகுதி தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடமோ அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.
அதேநேரத்தில், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலான கூம்பு வடிவ குழாய்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. குறிப்பாக இரவு 10 மணிக்கு பின்பும், காலை 6 மணிக்கு முன்பாகவும் ஒலிபெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. இதேபோல், அரசுக்கு சொந்தமான கட்டட வளாகங்களில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், கொடிகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பெரிய அளவிலான கட் அவுட்கள் ஆகியவைகளை வைக்கக்கூடாது.
மேலும், தனியார் மற்றும் பொது இடங்களில் விளம்பரம் செய்வதற்கு நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அதேபோல், பிரசாரத்திற்கு அனுமதிக்கப்படும் வாகனங்களில் மட்டுமே கொடிகள், ஸ்டிக்கர் வைத்துக் கொள்ளலாம்.
ஒலிபெருக்கிகளை அமைப்பதற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி மாற்றியமைப்பது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகி அனுமதி பெற வேண்டும். இந்த வாகனங்களில் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் தட்டு போர்டுகள் அமைத்தல் ஆகியவை கூடாது.
இதுபோன்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியருமான டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.