நெய்வேலியில் மார்ச் 24-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: தொல்.திருமாவளவன்
தமிழகத்திலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை வெளியேற்ற வலியுறுத்தி நெய்வேலியில் வருகிற மார்ச்.24-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை வெளியேற்ற வலியுறுத்தி நெய்வேலியில் வருகிற மார்ச்.24-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோயிலுக்கு புதன்கிழமை வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் அமோக வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
கிருஸ்துவர்கள், சிறுபான்மையினர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் உள்ள சமூக நீதிகூட்டணி, மதச்சார்பற்ற கூட்டணியாகும். அடுத்த பிரதமரை திமுக தலைவர் கருணாநிதிதான் நிர்ணயிப்பார். நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர் ராஜ்குமார் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மேலும் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும். தமிழகஅரசு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் விமானநிலையங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையை வெளியேற்ற வலியுறுத்தி வருகிற மார்ச் 24-ம் தேதி நெய்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.பேட்டியின் போது கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயிலுக்கு வருகை தந்த தொல்.திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி ஆதரவு திரட்டினார்.