விருதுநகரில் புதுப்பேருந்து நிலையத்திற்கு புறநகர் பேருந்துகளும்வர வலியுறுத்தி பஸ் மறியல் போராட்டம்
வெளியூர்களில் இருந்து விருதுநகர் வழியாக வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும் புதுப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வலியுறுத்தி நகர் நல அமைப்பினர் பஸ்மறியல் போராட்டத்தில்
வெளியூர்களில் இருந்து விருதுநகர் வழியாக வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும் புதுப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வலியுறுத்தி நகர் நல அமைப்பினர் பஸ்மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் புறநகர் பேருந்துகள், பைபாஸ் ரைடர், சில நிறுத்த விரைவு பேருந்துகள் ஆகியவை விருதுநகர் புதுப்பேருந்து நிலையத்திற்குள் வராமல் நான்கு வழிச்சாலை வழியாக செல்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஊருக்குள் வராமல் 4 வழிச்சாலை வழியாகவே செல்வதாலும், ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் பயணிகளை இறக்கியும் விடுகின்றனர். அதையும் மீறி பயணம் மேற்கொண்டால் லட்சுமி காலனி நிறுத்தத்தில் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து ஊருக்குள் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு 3 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதைக்கண்டித்து எம்.ஜி.ஆர் சிலைப்பகுதியில் அனைத்து பேருந்துகளும் புதுப்பேருந்து நிலையம் வழியாகவே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர் நல அமைப்பின் செயலாளர் டாக்டர் ரத்தினவேல் தலைமையில் பொதுமக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் அன்னப்பராஜ் உள்ளிட்ட போலீஸார் நகர் நல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Advertisement
பயணிகள் அனைவரும் முதல் நிறுத்ததிலேயே இறங்கி விடுகின்றனர். அதோடு, குறிப்பிட்ட நேரத்தில் நடை செல்ல வேண்டியுள்ளதாகவும், இனிமேல் உள்ளே வந்து செல்வதாக நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் உறுதியளித்த பின் கலைந்தனர். இதனால், விருதுநகரிலிருந்து மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ் போக்குவரத்து 30 நிமிடம் வரையில் பாதிப்பு ஏற்பட்டது.