விஸ்வகர்ம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே ஆதரவு: விஸ்வகர்ம சங்கம் முடிவு
விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க
விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க விஸ்வகர்ம விருது வழங்கும் விழா சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் பி.முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் எம்.கோவிந்தராஜ், சி.ஏகாம்பரம், ஆர்.பாவாடைபத்தர், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாநில செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகரின் சமூக சேவையை பாராட்டி விஸ்வகர்ம சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் ஏ.நடராஜன், எஸ்.மோகன், எஸ்.ராமலிங்கம், எஸ்.பாலசுப்பிரமணியன், கே.சி.ராஜாராம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.
விழாவில் விஸ்வகர்ம சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், விஸ்வகர்ம சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேசிய கைவினை கலைஞர்கள் நலவாரியம், தேசிய பொற்கொல்லர் நல வாரியம், தேசிய சிற்ப கலா அகாதெமி ஆகியவகளை மத்தியஅரசு ஏற்படுத்தி தர வேண்டும், திருட்டு நகை மீட்பு சட்டவிதிகளை திருத்தம் செய்ய வேண்டும், வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களாக விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்தவரை பொற்கொல்லர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.