மக்களை ஏமாற்றும் காங்கிரஸ்: இல. கணேசன்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என பாஜக மூத்த தலைவரும், தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான இல. கணேசன்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என பாஜக மூத்த தலைவரும், தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான இல. கணேசன் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் வியாழக்கிழமை காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆட்சியில் இல்லாத கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுவெல்லாம் செய்வோம் என வாக்குறுதி அளிப்பார்கள். மக்களும் அவர்களை சோதித்துப் பார்ப்பதற்காக வாய்ப்பு கொடுக்க நினைப்பார்கள்.
Advertisement
ஆனால், 60 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகால மன்மோகன் சிங் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் 10 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்பது மக்களை ஏமாற்றும் செயல். இதற்கெல்லாம் மக்கள் மயங்க மாட்டார்கள்.
தேர்தலுக்குப் பிறகு யாருக்கு ஆதரவு என்பது அதிமுகவும், திமுகவும் தெளிவுப்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மக்கள் தனிப்பெரும்பான்மையை அளிப்பார்கள்.
எனவே, தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவைக்கோரும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது. எனவே, ப. சிதம்பரத்துக்கு அந்த கவலையெல்லாம் வேண்டாம் என்றார் இல. கணேசன்.