நெல்லையில் பஸ், சாலை வசதி வலியுறுத்தி ஆட்சியரை சந்தித்த பள்ளி மாணவர்கள்
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பஸ் வசதி, சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பஸ் வசதி, சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பாப்பாக்குடி ஒன்றியம், பனையங்குறிச்சி, பாரதிநகர், குமாரசாமிபுரம், பாப்பாக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்டோர் முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு முக்கூடல் போன்ற நகரங்களுக்குதான் வர வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பனையங்குறிச்சி வழியாக முக்கூடலுக்கு பஸ் (தடம் எண் 10) இயக்கப்பட்டது. இதேபோல் ஆலங்குளத்தில் இருந்து ஆழ்வார்துலக்கப்பட்டி, பனையங்குறிச்சி, குமாரசாமிபுரம், பாப்பாக்குடி வழியாக முக்கூடலுக்கு பஸ் (தடம் எண் 9) இயக்கப்பட்டது.
மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட நகரப் பேரூந்துகள் அண்மை காலமாக இயக்கப்படவில்லை. இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவர், மாணவிகளும் பஸ் வசதி இல்லாமல் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே மேற்கண்ட நகரப் பேரூந்துகளை தொடர்ந்து இயக்க வேண்டும்.
சாலை வசதி: பாப்பாக்குடி ஒன்றியத்தில் செங்குளத்தில் இருந்து பனையங்குறிச்சி, ஆழ்வார்துலக்கப்பட்டி கிராமம் வரை தார் சாலை அமைத்து பல வருடங்களாகிறது. இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் காணப்படுகிறது.அம்பாசமுத்திரம் ஆலங்குளம் நெடுஞ்சாலையில் பனையங்குறிச்சி திருப்பத்தில் இருந்து பனையங்குறிச்சி வரையுள்ள தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. குத்தபாஞ்சான் ஊராட்சியில் ஆழ்வார்துலக்கப்பட்டி கிராமத்தில் கிழக்கு பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தாம்போதி சாலை பழுதடைந்து பல வருடம் ஆகிறது. ஆகவே பழுதடைந்த சாலையினை சீரமைக்க வேண்டும் என மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.