நெல்லை அருகே தாய், மகனை மிரட்டி ரூ. 8 லட்சம் நகைகள் பறிப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முகமூடி திருடர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தாய், மகனிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முகமூடி திருடர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தாய், மகனிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே ஊழியர் வீட்டை உடைத்து பணம், ஆசிரியரை மிரட்டி பணம் பறித்து சென்றனர்.
சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டி பிரதான சாலையை சேர்ந்தவர் குமார். கட்டட ஒப்பந்தக்காரரான இவர் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் விஜய் (30), தனது மனைவி ஜென்சிலி (28), தாயார் பியூலா (57) மற்றும் குழந்தைகளுடன் கரிசல்பட்டியில் வசித்து வருகிறார்.ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கர்ப்பினி மனைவியை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ப்பதற்காக விஜய் காரில் சென்றாராம். மருத்துவமனையில் இருந்து நள்ளிரவு விஜய் மற்றும் அவரது தாயார் பியூலா வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் எடையுள்ள தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. விஜய், பியூலாவை பார்த்த மர்ம நபர்கள் அவர்களை அரிவாள் முனையில் மிரட்டிய மர்ம நபர்கள் பியூலா அணிந்திருந்த 2 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி விட்டனர். மர்ம நபர்கள் விஜயின் கார் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. நகைகளின் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.
ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு: கரிசல்பட்டியில் விஜய் வசிக்கும் அதே தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மகன் செல்வக்கனி (56). மும்பையில் ரயில்வேதுறையில் பணி செய்து வருகிறார். செல்வக்கனி குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் செல்வக்கனியின் மனைவி ஹெலன், அவரது மகன் தினேஷ் ஆகியோர் ஊருக்கு வந்திருந்தனர்.
உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஹெலனும், தினேசும் திங்கள்கிழமை வீடு திரும்பினர். வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ. 7 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த ஆடைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.கரிசல்பட்டியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியர் டேவிட்பொன்ராஜ் (46), நாகர்கோவிலுக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம். அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரிடம் ரூ. 500 யை மர்ம நபர்கள் பறித்து சென்றனராம். அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பா. ராஜா, காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் வெள்ளக்கண்ணு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விரல்ரேகை நிபுணர்கள் சோதனை நடத்தினர். சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.