பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து: காங்கிரஸ் கண்டனம்
தலைமைச் செயலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்
தலைமைச் செயலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாள், பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் போது ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
நாடு முழுவதும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆனால், தமிழக தலைமைச் செயலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஜாதி, மதம், இனம் என எந்த ரூபத்தில் இருந்தாலும் பயங்கரவாதத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த சபதம் ஏற்கும் நாள் இது. இதில் அரசியல் கிடையாது.
இந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.