பாபநாசம் மலையில் புலிகளை பதிவு பொருத்திய நவீனக் கேமராக்கள் மாயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் பாபநாசம் மலையில் புலிகளை கண்டறியப் பொருத்தியிருந்த 2 நவீன கேமராக்களை காணவில்லை. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் பாபநாசம் மலையில் புலிகளை கண்டறியப் பொருத்தியிருந்த 2 நவீன கேமராக்களை காணவில்லை. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் 17 ஆவது புலிகள் காப்பகமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடையத்தில் இருந்து திருக்குறுங்குடி வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இக்காப்பகம் பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்றது.புலி, சிறுத்தை, யானைகள், மான், மிளா போன்ற அரிய வகை விலங்கினங்கள் உலகில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை தாவரங்களும் இக்காப்பகத்தில் உள்ளன.
இக்காப்பகத்தில் உள்ள விலங்கினங்கள் குறித்து கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படும். புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்கினங்கள் குறித்த கணக்கெடுப்பு அண்மையில் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து காப்பகத்தில் புலிகளை கண்டறிய நவீன கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. முண்டன்துறை, பாபநாசம், மணிமுத்தாறு வனப்பகுதியில் 60 இடங்களில் தலா 2 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டது.
புலிகள் உள்ளிட்ட விலங்கினங்களை கண்டறியப் பொருத்தப்பட்ட கேமராக்களில் இருக்கும் பதிவுகளை வனத்துறையினர் 45 தினங்களுக்கு ஒரு முறை சென்று அதனை சேகரித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு பாபநாசம் சரகத்தில் பொருத்தியிருந்த 2 கேமராக்களை காணவில்லை. தகவலறிந்த புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் கோயில்தேரி சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து துணை இயக்குநர் ஆர். காஞ்சனா கூறியதாவது: பாபநாசம் சரகத்தில் வனப்பகுதியின் ஆரம்ப எல்லையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள கோயில்தேரி பீட் என்ற இடத்தில் பொருத்தியிருந்த 2 கேமராக்களை காணவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.வனப்பகுதியில் பொருத்தப்படும் கேமராக்களை யானை உள்ளிட்ட விலங்கினங்கள் சேதப்படுத்துவதுண்டு. ஆனால் இப்போதுதான் கேமராக்கள் காணவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.