குறைந்த செலவில் அசுத்த உப்பு நீரை வடிகட்டும் தொழில்நுட்பம்: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு
குறைந்த செலவில் அசுத்த உப்பு நீரை வடிகட்டி சுகாதார பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் தொழில் நுட்பத்தை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறைந்த செலவில் அசுத்த உப்பு நீரை வடிகட்டி சுகாதார பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் தொழில் நுட்பத்தை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சி.சிவப்பிரகாசம், எஸ்.வனிதா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிவில் துறை மாணவர்கள்ஆர்.ஹரிபிரகாஷ், எஸ்.ஹரி விக்னேஷ், வி.ஹேமகுமார், பி.காசிராம் ஆகியோர் சேர்ந்து இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு கண்ணாடி தொட்டி, கூழாங்கற்கள் வாங்கி பயன்படுத்தி்யுள்ளார்கள்.கண்ணாடி தொட்டியின் கீழ்ப் புகுதியில் வடிகட்டிய நீர் வெளியேறுவதற்காக ஒரு குழாய் பொருத்தினார்கள்.
கண்ணாடித் தொட்டியில் கீழிருந்து மேலாக 2 செ.மீ. அளவு கூழாங்கல் (15 மீ.மீ.), 2 செ.மீ. கூழாங்கல் (6-15 மி.மீ.) அடுத்து 18 செ.மீ. சலித்த மணல், 2 செ.மீ. சுண்ணாம்புக்கல் மற்றும் 6 செ.மீ. வெற்றிடம் என்று 1:1:9:3 என்ற விகிதத்தில் நிரப்பினார்கள்.அசுத்த உப்பு நீரை கண்ணாடித் தொட்டியின் மேல் பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல் மீது பரவலாக ஊற்றிய உடன் அடுத்த 3 நிமிடங்களில் தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள குழாய் வழியாக வெளிவரும் வடிகட்டிய நீரை பரிசோதனை செய்தனர். இந்தச் பரிசோதனையிலிருந்து கிடைக்கும் அளவுகளை ஆரம்ப அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
வடிகட்டிய நீரின் கடினத் தன்மை 540 லிருந்து 210 ஆக குறைந்து விட்டது. மேலும் ஹைட்ரஜன் அயன் 8.6 லிருந்து 7.9 ஆக குறைுந்துள்ளது.நீரில் கலந்துள்ள பொருட்களின் அளவு 2916 மி.கி.லிருந்து 434 மி.கி ஆக குறைந்து சுத்தமாக்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் அசுத்தம் சுண்ணாம்புக் கலவையினால் 39 லிருந்து 48 ஆனது. எனவே மறுபடியும் அதைக் குறைப்பதற்கு மற்றொரு வடிகட்டுதல் மூலம் குறைத்தார்கள்.
இவ்வாறு வடிகட்டி சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரை சுகாதார பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். மேலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் உதவியுடன் குடிநீருக்காகவும் இந்த நீரைப் பயன்படுத்தலாம்.இந்த கண்டுபிடிப்பை கண்டறிந்த சிவில் துறை மாணவர்களை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.