தமிழகத்தில் முன்னணியாக கட்சியாக இருப்போம்: ஜி.கே. வாசன் நம்பிக்கை
தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சியாக தங்களின் புதிய கட்சி இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சியாக தங்களின் புதிய கட்சி இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலினால் காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள வாசன், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
காங்கிரஸிலிருந்து விலகிய இளைஞர், மாணவர், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
Advertisement
முன்னாள் எம்.பி.க்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் கூறியது:
புதிய கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சியில் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறும். அப்போது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் அறிவிக்கப்படும்.
புதிய கட்சியின் பெயரை பதிவு செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் குழு தில்லி சென்று தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து திரும்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் புதிய கட்சியின் பெயர் விரைவில் இறுதி செய்யப்படும்.
காங்கிரஸ் கட்சியினர் தவிர தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிóத்தனர். திருச்சி பொதுக்கூட்டம் முடிந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறேன்.
இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக நடந்து கொண்டது. இனியும் தாமதிக்காமல் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.