பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கு: கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மணலிவிளையில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தொடர்ந்த வழக்கில் அவரது கணவர் உள்பட 3 பேருக்கு 1
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மணலிவிளையில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தொடர்ந்த வழக்கில் அவரது கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
திசையன்விளை அருகேயுள்ள மணலிவிளையைச் சேர்ந்த அருணாசலம் மகன் செல்வகுமார் (35). இவருக்கும் ஏமன்குளத்தைச் சேர்ந்த துளசிமணி மகள் ஜமீலாவுக்கும் (28) கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாம். இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்தின்போது நகை, பொருள்கள் சீர்வரிசையாகக் கொடுக்கப்பட்டதாம். இந்நிலையில் தொழில்தொடங்குவதாகக் கூறி நகைகளை ஜமீலாவிடம், செல்வகுமார் வாங்கினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 9-3-2007 அன்று ஜமீலா மணலிவிளைக்கு சென்றபோது செல்வகுமார், அவரது தாய் சந்திரா, சகோதரி ஆனந்தி ஆகியோர் சேர்ந்து ஜமீலாவை கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நான்குனேரி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.கலியமூர்த்தி குற்றஞ்சாட்டப்பட்ட செல்வகுமார், சந்திரா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்தார். ஆனந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் மேகலாகென்னடி ஆஜரானார்.