மேலப்பாளையத்தில் கட்டடத் தொழிலாளி வெட்டிக்கொலை: பெண் பலத்த காயம்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தங்கை பலத்த
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தங்கை பலத்த காயமடைந்தார்.
மேலப்பாளையம் மண்டலத்துக்கு உள்பட்ட நடராஜபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலையா மகன் சங்கரலிங்கம் (45). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (40). இத் தம்பதிக்கு குழந்தையில்லையாம். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பரமேஸ்வரி, பாளையங்கோட்டையில் உள்ள ராஜாகுடியிருப்பில் குடியிருந்து வருகிறார். அங்கு அவருக்கும், கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கரலிங்கம், தனது சகோதரி பால்கனியுடன் (25) மேலப்பாளையம் ஞானியாரப்பா பெரியதெருவில் கட்டடப் பணிக்காக சனிக்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மகும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் சங்கரலிங்கமும், பால்கனியும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சங்கரலிங்கம் இறந்தார்.
பால்கனிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். ஆள்கள் நடமாட்டம் மிகுந்த ஞானியாரப்பா தெருவில் 2 பேர் வெட்டப்பட்ட சம்பவத்தால் மேலப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.