தூத்துக்குடியில் உள்ள வங்கி அலுவலகத்துக்குள் செவ்வாய்க்கிழமை திடீரென புகைமூட்டம் எழுந்ததால் அங்கு வேலை பார்த்துவந்த தந்தை மற்றும் மகள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பிரதான சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அலுவலராக வேலைபார்த்து வருபவர் சுப்பிரமணியன் (49). இவரது மகள் ரேவதி (26). சாயர்புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் ரேவதி கடந்த சில நாள்களாக தாற்காலிக பணி மாறுதல் அடிப்படையில் இங்கு வேலைபார்த்து வருகிறாராம்.
இந்நிலையில், சுப்பிரமணியனும், ரேவதியும் வங்கியில் உள்ள லாக்கர் பகுதிக்கு நகைகள் எடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை பகல் 12.15 மணியளவில் சென்றனராம். அப்போது, லாக்கர் உள்ள அறை முழுவதும் புகைமூட்டம் இருந்ததால் சுப்பிரமணியனும், ரேவதியும் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து, வங்கி அதிகாரிகள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்ததும் தென்பாகம் போலீஸார் வங்கி அலுவலகத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சார விநியோகம் இல்லாததால் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது, ஜெனரேட்ரில் இருந்து வெளியான புகை லாக்கர் அறைக்குள் புகுந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, புகையை வெளியேற்றும் வகையில் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது.
வங்கி அலுவலகத்துக்குள் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டு இருவர் மயக்கமடைந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதால் ஏராளமானோர் வங்கி முன்பு குவிந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வங்கி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.