பயிர்க்கடன் உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த உழவர் முன்னணி கோரிக்கை
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நெல் பயிர் உற்பத்திச் செலவு
பயிர்க்கடன் உச்சவரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு, தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நெல் பயிர் உற்பத்திச் செலவு ரூ.8 ஆயிரம் என மதிப்பிட்டு அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கி வந்தன. அன்றைய நிலையில் கிட்டத்தட்ட 12 ஏக்கர் நெல் சாகுபடிக்கு அப்பணி உதவியது. பல ஆண்டுகள் கடந்து, உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும், பயிர் கடனின் அளவு உயர்த்தப்படவில்லை.
அரசே ஒரு ஏக்கருக்கான உற்பத்தி செலவு ரூ.21500 என ஒப்புக்கொள்கிறது. ஆனால் பயிர் கடனுக்கு மட்டும் ரூ.1 லட்சம் என்ற உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. அரசின் மதிப்பீட்டின் படி ரூ.1 லட்சத்தை கொண்டு 5 ஏக்கருக்கும் குறைவான நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களை சாகுபடி செய்ய தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உள்ளது.
இடுபொருள் விலை ஏற்றம், ஆட்கள் கூலி உயர்வு, வேளாண் விளை பொருள்களுக்கு லாபமான விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சாகுபடிக்கு பணம் இன்றி சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பயிர்க்கடன் உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்பதை நீக்க, அதிகரித்துள்ள உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு, பயிர்க்கடன் உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என கடிதத்தில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.