கத்தார் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடல் திருச்சி கொண்டு வரப்பட்டு ஒப்படைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்த திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த ஜூன் மாதம் மீன் பிடி ஒப்பந்தத் தொழிலாளராக பக்ரைன் நாட்டுக்குச்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்த திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த ஜூன் மாதம் மீன் பிடி ஒப்பந்தத் தொழிலாளராக பக்ரைன் நாட்டுக்குச் சென்றார். கடந்த செப்டம்பர் 21 ந்தேதி அங்குள்ள கடல் பரப்பில் மீன் பிடித்த போது, அங்கு வந்த கதார் நாட்டு இராணுவத்தினர், தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கார்த்திகேயன் குண்டடிபட்டு பலியானர். இவருடன் மீன்பிடிக்கச் சென்ற சமயமுத்து, ராஜூ, ஐயப்பன் ஆகிய மூன்று நபர்களை கதார் இராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார்த்திகேயனின் உடலையும் கையகப்படுத்திச் சென்றனர். அந்த உடல் மத்திய, மாநில அரசின் முயற்சியால் இன்று விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது.
தமிழக அரசு, மீனவர் கார்த்திகேயனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இன்று காலை கார்த்திகேயன் உடலுக்கு , தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், துறை செயலர் விஜயகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் கார்த்திகேயன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.