பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணைத் திறப்பு: நெல்லை, தூத்துக்குடியில் 35,416 ஏக்கர் பாசனம் பெறுகிறது
தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,416 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.
தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,416 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.
தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 18,090 ஏக்கர் நிலங்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைகளில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையம் கால்வாய், கோடகன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை. தற்போது கார் பருவ அறுவடை நடைபெற்று வருகிறது.
இதனிடையே பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அணையில் இருந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடகன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 21,910 ஏக்கர் நிலங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய், தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய்கள் மூலம் நேரடியாக பாசன வசதி பெறும் 13,506 ஏக்கர் உள்ளிட்ட 35,416 ஏக்கர் நிலங்களுக்கு 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி 173 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாசனம் பெற வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், வேளாண்துறை இணை இயக்குநர் செ. சந்திரசேகரன், அணை செயற்பொறியாளர் பிச்சையா, உதவி செயற்பொறியாளர்கள் நட்டார், பாலசுப்பிரணியன், உதவி பொறியாளர் மாயமுருகன், மலர்மதி, கவிதா, வி.கே. புரம் நகர்மன்றத் தலைவி இ. மனோன்மணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.