நெல்லை பல்கலைக்கழகத்தில் மூட்டா ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்விக் கட்டணத்தைப் பதிவாளரின் ஜூலை 2013 அறிவிப்பின்படி குறைக்க வேண்டும். பதிவாளர்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் மூட்டா அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பதவி உயர்வுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்விக் கட்டணத்தைப் பதிவாளரின் ஜூலை 2013 அறிவிப்பின்படி குறைக்க வேண்டும். பதிவாளர், தேர்வாணையர், கல்லூரி வளர்ச்சிப் பிரிவு முதன்மையர், நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர், இளைஞர் நலத்துறை இயக்குநர் ஆகிய பதவிகளில் நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு வழங்கிய புதிய படிப்புகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும். தொலைநெறிக் கல்வியியல் பிரிவுக்குத் தனித்துறை அங்கீகாரம் வழங்க வேண்டும். 11ஆவது திட்ட ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிப்பலன்களை உடனே வழங்க வேண்டும். ஆய்வாளர்களை நெறியாளர்களாகத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மூட்டா கிளையின் தலைவர் பேராசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். மூட்டா மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் நாகராசன் தொடங்கி வைத்தார். கிளைச் செயலர் ஞா.ஸ்டீபன், துணைத் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். பொதுச்செயலர் சுப்புராஜ் நிறைவுரையாற்றினார். 70-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.