குவைத் நாட்டுக்கு கூலிக்கு மீன்பிடிக்கசென்று, அங்கு ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் தியாகவல்லி அருகே சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரபு(30), ராஜூ(27), மணிமாறன்(32), சுகன்ராஜ்(22) ஆகிய 4 பேர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூலிக்கு மீன்பிடிக்க குவைத் நாட்டுக்கு சென்றனர். அங்கு மாத ஊதியத்தில் விசைப்படகுகளில் வேலை செய்துவந்த 4 பேருக்கும், கடந்த 6 மாதங்களாக வேலை கொடுக்காமல், ஊதியம் வழங்காமல் அடைத்து வைத்து படகு உரிமையாளர் கொடுமைப்படுத்தி வருவதாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 4 பேரில் ஒருவர் செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சித்திரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார், தூதரகம் மூலம் முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு, இதுவரை மீனவர்கள் நாடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சித்திரைப்பேட்டை மீனவ கிராம தலைவர் எஸ்.மச்சகேது தலைமையில் பிரபு மனைவி வினிதா, ராஜூ மனைவி சுகன்யா, மணிமாறன் மனைவி ஆதவி, சுகன்ராஜ் தாய் சூரியகாந்தி மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் திங்கள்கிழமை காலை மனு அளித்தனர்.
அதில் குவைத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டுக்கொடுக்க வேண்டும் என தூதரக அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், தங்களிடம் மனு அளித்துள்ளோம். இதனால் வெளிநாட்டில் சிக்கிதவிக்கும் 4 பேரை உடனடியாக மீட்டுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.