கரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக முதியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெற்கு நெய்தலூர் ரமாயிபனையூரைச் சேர்ந்தவர் வாலாச்சி ரெட்டியார்(72). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் இனாம்புலியூரைச் சேர்ந்த ரவிக்குமார்(36) உள்ளிட்ட குளித்தலை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் 2013 ஜனவரி முதல் 2014-ம் ஆண்டு வரை ரூ.50 லட்சம் வரை சீட்டு பணம் கட்டியிருந்தார்களாம்.
இதில் சீட்டு எடுத்த ரவிக்குமாருக்கு பணம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து அவர் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புதன்கிழமை புகார் செய்தார். புகாரில், வாலாச்சி ரெட்டியார் மற்றும் அவரது உறவினர்கள் நெய்தலூரைச் சேர்ந்த ஜெகதீசன், மணிமேகலை, ராஜேந்திரன் ஆகியோர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் ரூ.1 லட்சம் வரை பணம் கட்டியிருந்ததாகவும், தன்னைப்போல ஏராளமானோர் சேர்ந்து ரூ.50 லட்சம் வரை பணம் கட்டியதாகவும், முதிர்ந்த பணத்தை கேட்டதற்கு நாளுக்கு நாள் இழுத்தடித்துவிட்டு தற்போது பணம் இல்லை என்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் வழக்குப்பதிந்து வாலாச்சிரெட்டியாரை புதன்கிழமை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.