நெல்லையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடி: இளைஞர் கைது
பங்குதாரர்களாக கோன் நிறுவனம் நடத்துவதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பங்குதாரர்களாக கோன் நிறுவனம் நடத்துவதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் திருப்பதி மகன் பாலகுமார் (47).
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி வீரமணிநகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் சதீஷ் (38). இவரும் சங்கரன்கோவில் பெரும்பத்தூரில் பங்குதாரர்களாக பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர்.
இந்நிறுவனத்தில் பாலகுமாருக்கு 80 சதவீதமும், சதீசுக்கு 20 சதவீதமும் லாபம் என்ற அடிப்படையில் பங்குதாரர்களாக கடந்த 20.09.2009 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் சதீஷ் 2011 ஆம் ஆண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பாலகுமாரும், விஜயலட்சுமியும் சேர்ந்து பேப்பர் கோன் நிறுவனத்தை நடத்தினர். சில மாதங்களுக்கு பின்னர் அதே நிறுவனத்தில் சதீஷ் விற்பனையாளராக பணிக்கு சேர்ந்தாராம். சதீஷ் ஏற்கனவே அந்நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த காரணத்தால் மேற்கண்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிமுகம் இருந்தது.
இதனை பயன்படுத்தி அந்நிறுவனத்தில் சதீசுக்கு 80 சதவீதமும், பாலகுமாருக்கு 20 சதவீதமும் பங்கு என்ற அடிப்படையில் போலியாக ஆவணங்களை சதீஷ் தயாரித்து திருநெல்வேலி, ராஜபாளையத்தில் வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளார்.
பின்னர் அந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தொகையினை சதீஷ் தன்னுடைய பெயருக்கு காசோலையாக பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சதீஷ் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ரூ. 20.68 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து சனிக்கிழமை போலீஸார் சதீஷை கைது செய்தனர்.