மூடிய ரயில்வே கேட்டை ரயில் வரும் முன் திறந்ததால் பரபரப்பு
அம்பாசமுத்திரத்தில் திங்கள்கிழமை இரவு மூடிய ரயில்வே கிராசிங் கேட்டை ஊழியர் ரயில் வரும் முன் அவசரமாக திறந்தார். அப்போது ரயில் வந்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
அம்பாசமுத்திரத்தில் திங்கள்கிழமை இரவு மூடிய ரயில்வே கிராசிங் கேட்டை ஊழியர் ரயில் வரும் முன் அவசரமாக திறந்தார். அப்போது ரயில் வந்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 7.20 மணியளவில் கல்லிடைக்குறிச்சி நிலையத்தை ரயில் கடந்ததும் அடுத்த நிலையமான அம்பாசமுத்திரம் வரும் முன் கல்லிடைக்குறிச்சிக்கும் அம்பாசமுத்திரத்திற்கும் இடையே உள்ள ரயில்வே கிராசிங் கேட்டுகளை ஊழியர்கள் மூடினர்.
அம்பாசமுத்திரத்தில் தென்காசி-பாபநாசம் பிரதான சாலையை பிரிக்கும் இடத்தில் உள்ள ரயில்வே கேட்டில் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. எனினும் ரயில் வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே கேட்டை அவசரமாக திறந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ரயில் வருவதற்கான சமிக்ஞை கிடைக்கவே அந்த ஊழியர் பதற்றத்துடன் மீண்டும் அவசர அவசரமாக கேட்டை மூடினாராம். அப்போது ரயில்வே கேட்டுக்குள் 3 மோட்டார் சைக்கிள்கள் வெளியே செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. யாரும் எதிர்பாராத வகையில் ரயில் அடுத்த சில நிமிடங்களில் இந்த ரயில்வே கேட்டை கடந்ததால் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.