கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்களின், தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 24வது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
கோரிக்கைகள் குறித்து இதுவரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும், கடந்த 23ஆம் தேதி இரவு முதல் விதிப்படி வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் என்எல்சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி, மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சென்னையில் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில்,கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தி நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை நெய்வேலி ஸ்கியூ பாலம் அருகே திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நெற்றியில் பட்டை, நாமமிட்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலியில் போராட்டத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்ததால், அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.