சேரன்மகாதேவி அருகே இடிதாக்கி மூவர் சாவு: மழையின்போது செல்போன் பேசியதால் நேர்ந்த சோகம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ஞாயிற்றுக்கிழமை இடி தாக்கியதலில் கூலித் தொழிலாளி மூவர் இறந்தனர். மழையின்போது செல்போன் பேசியதால் செல்போன் வழியாக இடி கசிந்து
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ஞாயிற்றுக்கிழமை இடி தாக்கியதலில் கூலித் தொழிலாளி மூவர் இறந்தனர். மழையின்போது செல்போன் பேசியதால் செல்போன் வழியாக இடி கசிந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தொழிலாளி பலத்த காயமடைந்து காதுகேட்கும் திறனை இழந்தார். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
சேரன்மகாதேவி அருகே மேலக்கூனியூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிராஜ் மகன் செந்தில்வேல்முருகன் (26). டிரைவராக வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மகன் முருகன் (36). மந்திரகுமார் மகன் விஜய் (19). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.செந்தில்முருகன், முருகன், விஜய் மற்றும் நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை கொண்டாட மேலக்கூனியூரில் ரயில்வே கேட்டுக்கு தென்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அசைவ உணவு தயாரித்து சாப்பிட்டனராம்.பிற்பகல் 3 மணியளவில் சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, கூனியூர் பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் வீட்டில் இருந்த செந்தில்வேல்முருகன், முருகன், விஜய் ஆகியோர் பலத்த காயமடைந்து கருகினர். சம்பவ இடத்திலே செந்தில்வேல்முருகன், முருகன் ஆகியோர் இறந்தனர். விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இடியுடன் பலத்த மழை பெய்தபோது இறந்தவர்களில் ஒருவர் செல்போன் பேசியதால் எளிதில் அக்கட்டத்தின் மீது இடி தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் கருகிய நிலை ஒரு செல்போன் கிடந்தது.இதேபகுதியை சேர்ந்த ஆத்தங்கரையான் மகன் இசக்கிராஜ் (45) என்பவரின் உடல் இடுப்புக்கு கீழே கருகியது. காதுகேட்கும் திறனை அவர் இழந்ததாக கூறப்படுகிறது. இசக்கிராஜ் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் க. சேதுராமலிங்கம், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ப. ராஜா, காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடி தாக்கியதில் ஒரு கிராமத்தை சேர்ந்த மூவர் இறந்தது அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.