சேலத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (30). இவரது மனைவி செல்வநாயகி (28). இவர்களுக்கு கௌதமன் (11), சுதாகர் (8), சுகப்ரியா (6) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு கடன் தொல்லை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செல்வநாயகி மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் காரிப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே சங்கரும் அவரது குழந்தைகளும் அவர்களது வீட்டில் சனிக்கிழமை மயங்கிக் கிடந்துள்ளனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், மனைவி மாயமானதால் மனமுடைந்த சங்கர், தனது குழந்தைகளுக்கு ரொட்டியில் விஷத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு, தானும் குடித்திருப்பது தெரிய வந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறியுள்ள காரிப்பட்டி போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.