அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருட்டு: உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 6 ஊழியர்கள் கைது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடைத்தாள் திருட்டு குறித்து உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 6 ஊழியர்களை அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடைத்தாள் திருட்டு குறித்து உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 6 ஊழியர்களை அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுத்துறையில் உள்ள அறையில் கடந்த 16-2-2015 அன்று மாணவர்களின் விடைத்தாள்கள் உள்ள பண்டில் ஒன்று திருடு போயின. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் சிலர் சேர்ந்து, மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அம்மாணவர்களின் விடைத்தாளை திருடி, வேறு விடைகள் எழுதிய விடைத்தாளை இணைத்து அவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் ஊழியர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியவந்ததால், அந்த விடைத்தாள்களை ஊழியர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 8 அலுவலக உதவியாளர்கள் கண்டறியப்பட்டு, பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த மார்ச் மாதம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு உறுதுணையாக இருந்த 25 ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள படிப்பு மையங்களுக்கும் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து பல்கலைக்க்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தேர்வுத்துறை விடைத்தாள்கள் திருடிய வழக்கில் கடலூர் ரெளலத்நகரைச் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய வரலாற்று பிரிவு உதவிப் பேராசிரியர் சி.பாஸ்கர் (35), அலுவலக உதவியாளர்கள் சி.கொத்தங்குடித்தோப்பைச் சேர்ந்த எம்.ராமசாமி (32), சி.கொத்தங்குடித்தோப்பைச் சேர்ந்த எஸ்.மாரிமுத்து (33), சிதம்பரம் வி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த ஏ.சங்கர் (41), மேலகீரப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), என்.பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஆனந்த் (33) ஆகிய 6 பேரை அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பிரசன்னா, பிரபாகரன் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.