விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்கள் பயனடையும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியறையில் நவீன வசதியுடன் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், வங்கி, ரயில்வே பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1,2 மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால், சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் வருகை தந்து புத்தகங்களை குழுக்களாக படித்துச் செல்கின்றனர். இதில், குரூப்-1,2 ஆகியவைகளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டு தேர்வுக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வழிகாட்டு மையத்தை பயன்படுத்தி் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.