முகப்பு
தற்போதைய செய்திகள்

மௌலானா ஆசாத் உதவித் தொகை: சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

Updated On : 17 ஆகஸ்ட், 2015 at 6:46 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:58 AM

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

   இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி தொடர முடியாமல் சிரமப்படும் மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பயனடைய தமிழகத்தில் வசித்து வரும்  இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

நிகழாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டத்தின் மூலம் 11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும், 12-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் என இரண்டு தவனைகளில் வழங்கப்படும். இக்கல்வி உதவித்தொகை, கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது.

இத்தொகையை பெற மாணவிகள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம். 10-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நிகழாண்டில் அரசு  அங்கிகாரம் பெற்ற பள்ளிகளில் 11-ம் படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் பள்ளி சேர்க்கை அனுமதி சீட்டு நகல், ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதிமொழி ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை தாங்கள் பயில்கிற பள்ளியில் அளிக்க வேண்டும்.

இதை பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர் ஆகியோர் சரிபார்த்து கையொப்பம் செய்து the secretary, maulana azad education fountation, (Ministry or Minority Afairs Government of India) cheims ford road, New Delhi- 110055 என்ற முகவரிக்கு வருகிற 30.9.2015-க்குள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல், 2015-16ம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவி தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் www.maef.nic.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்கள் குறித்தும் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இக்கல்வி உதவித் தொகை பெற குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு சிறுபான்மையின மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.