தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: பணி வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்கிழமை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்கிழமை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்ததது சத்திரெட்டியாபட்டி கிராமம். இக்கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பணி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஊராட்சி நிர்வாகம் பணி வழங்கவில்லையாம். ஏற்கனவே இப்பகுதியில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையை நம்பியே பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலையுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் இத்திட்ட வேலை வழங்காத காரணத்தால் சிரமத்தில் இருந்து வருகின்றனர். அதனால், உடனே பணி வழங்க வலியுறுத்தி அக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியம்மாள் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதோடு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகளையும் ஒப்படைக்கவும் முயற்சித்தனர்.
Advertisement
அப்பகுதியில் இருந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட அளவில் 5 பேரை ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். பின்னர் ஆட்சியர் அக்கோரிக்கையை ஏற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.