மது போதையில் தனியார் பேருந்தை தாறுமாறாக இயக்கிய 2 ஓட்டுநர்கள் கைது
விருதுநகர் அருகே மதுபோதையில் தனியார் டிராவல்ஸ் பேருந்தை 4 வழிச்சாலையில் தாறுமாறாக இயக்கிய 2 ஓட்டுநர்களை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே மதுபோதையில் தனியார் டிராவல்ஸ் பேருந்தை 4 வழிச்சாலையில் தாறுமாறாக இயக்கிய 2 ஓட்டுநர்களை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகரில் சென்ட்ரல் ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்தாராம். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் தனியார் டிராவல்ஸ் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணம் மேற்கொண்டாராம். 50 பயணிகளுடன் சென்ற இப்பேருந்தை மதுரையைச் சேர்ந்த ஒட்டுநர் செந்தில்குமார் இயக்கினாராம்.
அப்போது, இரவு 11.30 மணிக்கு விருதுநகர் நோக்கி வரும் போது 4 வழிச்சாலையில் தாறுமாறாக விபத்தை ஏற்படுத்துவது போல் ஓட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்தும் படி அருகில் சென்று கூறுகையில், அவர் மதுக்குடித்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், மாற்று ஓட்டுநரான நாங்குனேரி அப்பாத்துரையும் போதையில் இருந்ததால் மதுரைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக செல்ல வேண்டியிருப்பதால் நிறுத்தாமல் ஓட்டும்படி கூறினாராம்.
பின்னர் சூலக்கரை சோதனைச் சாவடியில் நின்றிருந்த போலீஸாரிடம் பயணிகள் ஆபத்து என சத்தம் போட்டு தெரிவித்தார்களாம். அதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு சூலக்கரை போலீஸார் பேருந்தை நிறுத்தியதும் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரி சரவணன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ஓட்டுநரான செந்தில்குமார்(36), மாற்று ஓட்டுநரான அப்பாத்துரை(51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Advertisement