தாமிரவருணியில் வெள்ளம் நீடிப்பு: ஆட்சியர் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் கனஅடி செல்வதால் தாமிரவருணியில் வெள்ளம் நீடிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் கனஅடி செல்வதால் தாமிரவருணியில் வெள்ளம் நீடிக்கிறது.
கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், பொதுமக்கள் நீர் நிலைகள், அணைகளுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் மு. கருணாகரன் கேட்டுக் கொண்டார்.
பாபநாசத்தில் முண்டன்துறை பாலம், திருநெல்வேலி கருப்பந்துறை பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிகளிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள மானூர், பள்ளமடை ஆகிய குளங்கள் நிரம்பியது.
இக்குளங்களை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ, மானூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அப்போது ஆட்சியர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. சேர்வலாறு, பாபநாசம், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரவருணி ஆற்றில் 22 ஆயிரம் கனஅடி செல்கிறது. கரையோரத்தில் வசிப்போருக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நீர் நிலைகள், அணைகளுக்கு வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணியில் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் திட்டங்கள் மூழ்கி குடிநீர் விநியோகம் பாதி்க்கப்பட்டுள்ளது. அந்தந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் விரைவில் வெள்ளம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் குறைந்ததும் குடிநீர் திட்டங்களை சீரமைக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.