முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவை தலைமைச்செயலகத்தில் முற்றுகை போராட்டம்: 400 பேர் கைது

கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதிதரக்கோரி புதுவையில் தலைமைச் செயலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதிதரக்கோரி புதுவையில் தலைமைச் செயலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலைக் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசு கல்வித்துறை செயலாளராக உள்ள ராகேஷ்சந்திரா மீது நிலமோசடி, சென்டாக் முறைகேடு புகார்கள் உள்ளன. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாநில அரசு அனுமதி தராமல் அவரை பாதுகாத்து வருகிறது. உடனே சிபிஐ விசாரணைக்கு அனுமதி தர வலியுறுத்தியும், முறைகேடு புகார்கள் தொடர்பாக செயலாளர் ராகேஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக அதன் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேரந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

தலைமைச்செயலகம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸôர் வழிமறித்து கைது செய்தனர். கொளத்தூர் மணி உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக கொளத்தூர் மணி கூறியதாவது: புதுவை அரசு ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. செயலாளர் ராகேஷ் சந்திரா மீது சிபிஐ விசாரணை நடத்த உரிய அனுமதியை அரசு அளிக்க வேண்டும். இல்லையென்றால், அரசே முறைகேடு புகார்களுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றார். முற்றுகைப் போராட்டத்தால் தலைமைச்செயலகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.