தேசிய புத்தகக் கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி கூட்டுறவு புத்தகச் சங்கம் சார்பில் தேசிய புத்தகக் கண்காட்சியை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி கூட்டுறவு புத்தகச் சங்கம் சார்பில் தேசிய புத்தகக் கண்காட்சியை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை 10 நாள்கள் வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் இருந்து வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்களை கண்காட்சியில் வைத்துள்ளனர். 100 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. முதல்வர் என்.ரங்கசாமி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு 5-க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.
குழந்தைகளுக்கான நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வது, அறிவியல், பொது அறிவு, பள்ளிப்பாடநூல்கள், ஆன்மீகம், விளையாட்டு உள்பட பல்வேறு வகையான நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கணிப்பொறி வழிக்கற்றல் உபகரணங்கள், கல்வி குறித்து மென்தகடுகள், தகவல்தொழில்நுட்ப உபகரணங்களும் உள்ளன.
ரூ.1 கோடிக்கு விற்பனை வாய்ப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ரூ.80 லட்சம் அளவுக்கு நூல்கள் விற்பனை ஆனது. நடப்பாண்டு வெவ்வேறு வகையான தலைப்புகளில் நூல்கள் கண்காக்டியில் வைக்கப்பட்டுள்ளதால் ரூ.1 கோடிக்கு நூல்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியில் நூல்கள் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது.
வாசகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.200-க்கு மேல் வாங்குவோர், குலுக்கல் முறையில் நாள்தோறும் தேர்வு செய்யப்பட்டு ரூ.500 மதிப்புள்ள நூல்கள் பரிசாக தரப்படுகிறது. நடப்பாண்டும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நூல்கள் வாங்குவோருக்கு புத்தக மகாராஜா மற்றும் மகாராமணி சான்றிதழ் தரப்படும். ரூ.1000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தகவிரும்பி சான்று தரப்படும். மேலும் விவரங்களை அறிய 9444776733-ஐ தொடர்பு கொள்ளலாம். இதன் நிறைவு விழா 26-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் பாஞ்.ராமலிங்கம், முருகன் ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு சென்னை புத்தகக்கண்காட்சி மழை, வெள்ளத்தால் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இதனால் பதிப்பாளர்கள் அதிகளவில் இக்கண்காட்சிக்கு வந்துள்ளனர். கடந்த முறை ரூ.200-க்கு மேல் புத்ததகம் வாங்கியவர்களுக்கு 30 ஆயிரம் பரிசுக் கூப்பன்கள் தரப்பட்டன. நடப்பாண்டு 50 ஆயிரம் பரிசுக்கூப்பன்கள் அச்சிட்டுள்ளோம் எனத்தெரிவித்தனர்.